ஒவ்வொரு நாளும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் Snapchat ஐப் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அவர்கள் மகிழ்ந்திருக்கவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் சுதந்திரமாய் உணர்கின்றனர். அந்தச் சுய வெளிப்பாடுகள் அனைத்தின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் நாங்கள் தீவிரமாய் எடுத்துக் கொள்கிறோம். அதனால் தான் FBI உடனான Apple-இன் வழக்கில் Apple-ஐ ஆதரித்து இன்று சட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.
சான் பெர்னார்டினோ பயங்கரவாதத் தாக்குதலின் பின்னால் இருக்கும் பயங்கரவாதிகளில் ஒருவனான சையத் ரிஸ்வான் பாரூக்குடன் தொடர்புடைய பூட்டப்பட்ட iPhone இந்த வழக்கின் மையமாக உள்ளது. Apple-இடமிருந்து பொறியியல் உதவியின்றி FBI -ஆல் iPhone பூட்டைத் திறக்க முடியாது, எனவே தொலைபேசியினுள் "பின்வாயிலை" உருவாக்குவதற்கான புதிய iOS நிரலை எழுதும்படி Apple-இடம் கூறும் ஒரு நீதிமன்ற ஆணையைப் பெற்றது.
அதாவது ஒற்றைக் கூட்டாட்சி நீதிபதி Apple-இன் சொந்த மென்பொருளை ஹேக் செய்யும்படி அதன் பொறியாளர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளார். தனியார் நிறுவனங்கள் தங்களின் சொந்தத் தயாரிப்புகளை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் (அல்லது அழிக்க வேண்டும்) என்று உத்தரவிடும் அத்தகைய ஒரு மிகைப்படும் அதிகாரத்தை அரசாங்கம் இதற்கு முன்னர் ஒருபோதும் வலியுறுத்தியதில்லை—வழங்கியது கூட இல்லை.
ஆனால் ஏதோ ஒரு நிறுவனம் தனது தயாரிப்புகளை வடிவமைப்பதற்கான சுதந்திரம் என்பதையும் தாண்டியதாய் இங்குள்ள கவலைகள் உள்ளன. இந்தத் தீர்ப்பின் உண்மையான ஆபத்து உங்கள் தகவல்கள், தகவல்தொடர்புகளின் பாதுகாப்பிற்கு அது ஏற்படுத்தும் அச்சுறுத்தலாகும். இங்கு Snapchat-இல் மக்கள் தாங்களாகவே இருக்கும் சுதந்திரத்தை உணர உதவும் வழியில் அவர்களின் உள்ளடக்கத்தை அனுப்ப எங்களை நம்புகின்றனர். இதுவரை அனுப்பப்பட்ட ஒவ்வொரு Snap -ஐயும் பாதுகாப்பதற்காக நாங்கள் எங்கள் தயாரிப்புகளை மறுவடிவமைப்பு செய்யவேண்டும் என்று ஒரு நீதிமன்றம் திடீரென ஆணையிட்டால், எங்கள் சேவை அதே மாதிரி இருக்காது. அதனால் தான் நாங்கள் Apple-க்கு ஆதரவாக நிற்கிறோம்.
சான் பெர்னார்டினோவில் நடைபெற்ற சொல்லமுடியாத் தீங்கினைக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதை நாங்கள் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பயங்கரவாதிகள் மீதோ பிற எந்தக் குற்றவாளிகள் மீதோ Snapchat எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை. மேலும் உதவிக்கான சட்டப்பூர்வக் கோரிக்கைகளைப் பெறும்போது சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் அதை நாங்கள் நிரூபிக்கிறோம். 2015 -ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 750-க்கும் மேற்பட்ட முறைமன்ற அழைப்பாணைகள், நீதிமன்ற உத்தரவுகள், தேடல் ஆணைகள் மற்றும் பிற சட்டக் கோரிக்கைகளை நாங்கள் செயலாக்கியுள்ளோம். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் அனைத்து விவரங்களையும் காணலாம்.
ஆனால் எங்களிடம் உள்ள தகவல்களை அரசாங்கத்திடம் வழங்குவதற்கும், தற்போது எவரிடமும் இல்லாத அணுகலை அனுமதிக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகளை மறுவடிவமைக்கக் கட்டாயப்படுத்தப்படுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. Apple நிறுவனத்தை அதன் தொலைபேசியில் ஒரு பின்வாயிலை உருவாக்கும்படி ஒரு நீதிபதியால் கட்டாயப்படுத்த முடியுமானால், மற்றொரு நீதிபதியால் எங்கள் தரவு பாதுகாப்பை நாங்களே மீறும் படி செய்ய முடியும்.
இந்தத் தீர்ப்பில் எங்களை உண்மையில் கவலையுறச் செய்யும் வேறொன்றும் உள்ளது. இந்த விரிவான புதிய அதிகாரத்திற்காக அரசாங்கத்தால் கொண்டுவர முடிந்த ஒரே அடிப்படை 1789 -இல் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். எழுத்துப்பிழை அல்ல. திறன்பேசிகள் என்ன தொலைபேசிகளையே கற்பனை செய்திராத சட்டமன்ற உறுப்பினர் குழுவான முதலாவது காங்கிரஸால் 220 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ஒரு சட்டம் தான் மக்களாட்சி வழிமுறையை வளைக்கும் அரசாங்கத்தின் துணிச்சலான முயற்சிக்கான ஒரே ஒரு நியாயப்படுத்தலாக உள்ளது.
மறுக்கமுடியாத முக்கிய நலனான தேசியப் பாதுகாப்பை, அதற்கு சமஅளவில் முக்கிய நலனான தனிப்பட்ட தகவல்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பேணிக்காப்பதுடன் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது குறித்து நாம் ஓர் தேசமாக ஒரு முக்கியமான உரையாடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் அந்த உரையாடலை வரவேற்கிறோம். ஆனால் வழக்கமான விடயங்களைப் போலவே இதுவும் காங்கிரஸுக்கு முன்னிலையில் மக்களாட்சி பரிமாற்றங்களின் மூலமாக நடைபெற வேண்டும். தொழினுட்ப நிறுவனங்களின் அடிப்படையை மாற்றும் புதிய ஆணைகளை விதிக்க ஒற்றை நீதிபதியை அனுமதிப்பது இதுபோன்ற முக்கிய விவாதங்களைத் தீர்ப்பதற்கான சரியான வழி அல்ல.
தொழில்கள் தங்கள் தயாரிப்புகளை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கூற வேண்டுமா என்பது குறித்துச் சட்டமியற்றுபவர்களும் தொழில்களும் நுகர்வோரும் ஒரு நேர்மையான உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.
இவான் ஸ்பீகல்